விவசாயி வீட்டில் 18 பவுன் நகைகள், ரூ.4¼ லட்சம் கொள்ளை

கறம்பக்குடி அருகே விவசாயி வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-03-05 18:59 GMT

விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அம்மானிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 40), விவசாயி. இவரது மனைவி உமாராணி (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் கருப்பையா தனது வீட்டை பூட்டி விட்டு வீட்டின் அருகே சாவியை வைத்து விட்டு கறம்பக்குடிக்கு சென்றுவிட்டார். ஆடுகளை மேய்க்க சென்றிருந்த அவரது மனைவி உமாராணி மாலை 5.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீடு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

18 பவுன் நகைகள், ரூ.4¼ லட்சம் கொள்ளை

அங்கு வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. கருப்பையாவின் மகன்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் காதணி விழா நடந்தது. அதற்கு மொய்யாக கிடைத்த பணம், செய்முறையாக வந்த நகைகள் முழுவதும் திருட்டு போனதால் உமாராணி கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் மற்றும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து பீரோவை உடைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.4¼ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்