இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு: மத்திய அரசு கடும் கண்டனம்

டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இலங்கை தூதரை நேரில் வரவழைத்து மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Update: 2024-08-01 07:45 GMT

புதுடெல்லி,

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 400- விசைப்படகுகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். நேற்று இரவு மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் கைது நடவடிக்கைக்கு அஞ்சி மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நோக்கி திருப்பி உள்ளனர்.

அப்போதும் விடாமல் இலங்கை கடற்படையினர் ரோந்துப் படகில் அவர்களை துரத்திச் சென்றுள்ளனர். இதில், கார்த்திகேயன் என்பவரின் விசைப்படகு மீது இலங்கை ரோந்துப் படகு மோதியுள்ளது. இதனால் கார்த்திகேயனின் படகு நடுக்கடலில் மூழ்கியுள்ளது. இதில், மீனவர் மலைச்சாமி உயிரிழந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

மாயமாகியுள்ள ராமச்சந்திரனை மீட்கும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய செயலால், தமிழக மீனவர் உயிரிழந்து இருப்பதற்கு மத்திய அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்த மத்திய அரசு, இலங்கை கடற்படையினரின் செயலை கண்டித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்