தேர்தல் பத்திரங்கள் திட்டம்: மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

Update: 2024-10-05 17:46 GMT

புதுடெல்லி,

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கடந்த  2017 ல்  மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தேர்தல் செலவுக்காக கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை ரொக்கமாக இல்லாமல் வங்கி வழியாக கைமாறினால், கருப்பு பணத்தை தடுக்கலாம் என்பதால் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக ஜனநாயக சீர்திருத்த சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் நிர்வாகி ஜெயா தாக்கூர் ஆகியோர் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பர்திவாலா,, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அரசியல்சாசன அமர்வு விசாரித்து வழங்கிய தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பொது மக்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்திற்கும் எதிரானது . தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினர்.இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரியும், திறந்தவெளி நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த கோரியும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், '' மறு சீராய்வு மனுவை ஆய்வு செய்ததில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பில் எந்த தவறும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் 2013ம் ஆண்டு விதிப்படி, மறு சீராய்வு தேவையில்லை. எனவே இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன'' என உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்