தற்காப்பு பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் - பயிற்சியாளர் கைது

தற்காப்பு பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-09-06 23:11 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி அருகே உள்ள சுல்தான்புரி பகுதியில் இயங்கி வரும் ஒரு பள்ளியில், மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்பு மூலம் இலவசமாக தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் தற்காப்பு பயிற்சி வகுப்பின்போது பயிற்சியாளர் சதீஷ்(45) என்பவர், 11 வயது மாணவி ஒருவரை தகாத முறையில் தொட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி அவரது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் சதீஷை கைது செய்தனர். அவர் அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்ல என்றும், தற்காப்பு பயிற்சி வழங்குவதற்காக தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அரசு மிகவும் உறுதியாக உள்ளது எனவும் டெல்லி கல்வித்துறை மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்