கொல்கத்தாவில் சிபிஐ அலுவலகம், ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து

கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-09-03 11:42 GMT

கொல்கத்தா,

கொல்கத்தாவில் உள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் சிபிஐ அலுவலகம் மற்றும் பெடரல் ஏஜென்சியின் ஊழியர்களின் குடியிருப்புகள் கொண்ட மாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் 5வது மாடியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து கண்டறியப்பட்டதும், 5வது மாடியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் உள்பட குடியிருப்புகளில் வசித்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் அங்கு சென்ற அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட 3 பேரும் தீ விபத்து ஏற்பட்ட சிபிஐ அலுவலகத்தின் 15வது மாடியில் வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்