காலையில் பா.ஜ.க.: மாலையில் காங்கிரஸ் - ஒருமணி நேரத்தில் கட்சி தாவிய முன்னாள் எம்.பி.

அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2024-10-03 12:51 GMT

சண்டிகார்,

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது.

அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முன்னாள் எம்.பி. அசோக் தன்வார், மதியம் 2 மணி அளவில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு மணி நேர இடைவேளையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவிய சம்பவம், அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானாவில் முன்னாள் எம்.பி-யாக இருந்த அஷோக் தன்வார் இப்படி கட்சி மாறுவது இது முதன்முறை அல்ல. கடந்த ஜனவரி மாதம் பா.ஜ.க.-வில் இணைந்து, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் குமாரி செல்ஜாவிடம் தோல்வியடைந்த நிலையில் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி மூன்று கட்சிகளுக்கு சென்றுவிட்டு, தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியிருக்கிறார்.

2014 -20200ம் ஆண்டு வரை அரியானா காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த அசோக் தன்வார் 2021-ம் ஆண்டு திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து கட்சியிலிருந்து வெளியேறி பா.ஜ.க வில் இணைந்தார். தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்