கர்நாடக கவர்னரை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

கர்நாடக கவர்னருக்கு எதிராக வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Update: 2024-08-17 11:18 GMT

பெங்களூரு,

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, முதல்-மந்திரி சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் டி.ஜே.ஆபிரகாம் அம்மாநில கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து ஆபிரகாம் அளித்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், வீட்டுமனை முறைகேடு விவகாரத்தில் சித்தராமையா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்த கர்நாடக கவர்னர் அனுமதியளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் சித்தராமையா மீதான விசாரணைக்கு மத்திய பாஜக அரசின் சதி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, விசாரணைக்கு கவர்னர் அனுமதித்த சூழலில் முக்கிய அதிகாரிகளுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்