கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை நீக்கமா? நீடிக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு...!

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்ததை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பளிக்கிறது.

Update: 2022-10-13 02:46 GMT

புதுடெல்லி,

கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் பலர் அம்மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியம் இல்லை என்றும் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் நடைபெற்றது.

கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, ''உடுப்பியில் உள்ள கல்லூரி கடந்த 2013-ம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

இந்த சீருடை என்பதில் ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர். மாணவிகளை சில அமைப்புகள் தூண்டி விடுகின்றன. ஹிஜாப் அணிய தடை விதித்தது நடுநிலையான உத்தரவே ஆகும்'' என்று வாதிட்டார். அதேபோல், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி பரபரப்பு வாதங்களை முன்வைத்தனர். 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் கடந்த மாதம் 22-ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதால கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கில் அளிக்கப்பட இருக்கும் தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்