உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து சாவு

உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

Update: 2024-07-04 04:06 GMT

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. இங்கு தாவணகெரேவை சேர்ந்த மல்லன் கவுடா மற்றும் ஜோதி தம்பதியின் மகள் சராவணி (22) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக தாசரஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். சராவணிக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு சராவணி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் சராவணி கடந்த 2 நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரது தாய், சராவணியை சந்திக்க வாடகை வீட்டிற்கு வந்தார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்ள சராவணியை வற்புறுத்தி உள்ளார். எனினும் சராவணி திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் சராவணி வழக்கம்போல் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு அலுவலக பணியில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் திடீரென சராவணி வாந்தி எடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சராவணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாகலகுண்டே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். திருமணத்திற்கு தாய் வலியுறுத்தியதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உடற்பயிற்சி கூடத்தில் பெண் ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்