வடகிழக்கு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகள் - வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல்

‘ஆபரேஷன் கோல்ட் ரஷ்’ மூலம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.33.40 கோடி மதிப்பிலான 394 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Update: 2022-09-21 13:54 GMT

புதுடெல்லி,

மிசோரம் மாநிலத்தில் இருந்து வெளிநாட்டிற்கு தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கடத்தலை தடுக்க வருவாய்த்துறை புலனாய்வு இயக்குனரகம் மூலம் 'ஆபரேஷன் கோல்ட் ரஷ்' தொடங்கப்பட்டது.

இந்த குழு முதற்கட்டமாக கடந்த 19-தேதி மராட்டிய மாநிலம் பிவாண்டியில், சரக்கு பெட்டகங்களை ஆய்வு செய்தது. அப்போது 20 கிலோ எடையுள்ள 120 வெளிநாட்டு தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 10.18 கோடி ரூபாய் ஆகும்.

அதே போல் இரண்டாவது சரக்கு பீகாரில் கண்டுபிடிக்கப்பட்டது. லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கிடங்கில் ஆய்வு செய்ததில் சுமார் 28.57 கிலோ எடையும், 14.50 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட 172 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதே போல் டெல்லியில் கடத்தப்பட இருந்த 17 கிலோ எடை கொண்ட 102 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 8.69 கோடி ரூபாய் ஆகும். மொத்தமாக 65.46 கிலோ எடையும், தோராயமாக 33.40 கோடி ரூபாய் மதிப்பும் கொண்ட 394 வெளிநாட்டு தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்