முத்துப்பேட்டை அருகே, டிராக்டர் மோதி பள்ளி மாணவி சாவு - தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு

முத்துப்பேட்டை அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். தலைமறைவான டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2019-11-13 22:15 GMT
முத்துப்பேட்டை, 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி செறுபனையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மகள் சக்திபிரியா (வயது 12). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக சக்திபிரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சக்திபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாணவியின் தாத்தா மணிமுத்து எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி மீது மோதிய டிராக்டர் புத்தகரத்தை சேர்ந்த சத்தியநாராயணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், டிராக்டரை அதேபகுதியை சேர்ந்த பிச்சையப்பன் மகன் டிரைவர் ஜான் என்பவர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள டிரைவர் ஜானை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்