திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.15 கோடி வசூல்

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-25 03:31 GMT

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் நடைபெற்றது. உழவாரப் பணிக்குழுவினா், கோவில் பணியாளா்கள் உள்ளிட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதன்படி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கம் 2 கிலோ 352 கிராமும், வெள்ளி 41 கிலோ 998 கிராமும், 1,589 வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் கோவில் யானை பராமரிப்புக்கான உண்டியல் மூலம் 1 லட்சத்து 67 ஆயிரத்து 860 ரூபாயும், கோசாலை பராமரிப்புக்காக 82 ஆயிரத்து 722 ரூபாயும் வருமானமாக கிடைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்