ஆவணி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை தேரோட்டம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-09-01 02:49 GMT

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழா 8-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பெருமாள் அம்சமாக 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆவணித் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (திங்கட்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தேரும் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேர், வெளி வீதி நான்கிலும் பவனி வந்து நிலையை அடைகிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்