நடிகை அதுல்யா வீட்டில் திருட்டு - 2 பேர் கைது

நடிகை அதுல்யா வீட்டில் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-04 01:53 GMT

கோவை,

நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருப்பவர் அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோவை ஆகும். இவர் கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இவர்களது வீட்டில் வேலை பார்க்கும் தொண்டாமுத்தூரை அடுத்த குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வி(வயது46) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட செல்வி மற்றும் அவரது தோழியான சுபாஷினி(40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட்டை மீட்பதற்கான விசாரணையை போலீசார் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்