கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் 3 பேர் கைது


தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:47 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து இருப்பதாக கூறி, கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து இருப்பதாக கூறி, கிளினிக் நடத்திய போலி டாக்டர்கள் 3 பேர்கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீசில் கூறியதாவது:-

போலி கிளினிக் கண்காணிப்பு

கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் ஏதும் செயல்படுகிறதா? என்று மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலை மையிலான குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே. என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது.

இங்குள்ள டாக்டர் பெயர் மனோஜ் பிரபு என்றும், அவரது மருத்துவ அங்கீகார படிப்பு என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மனோஜ்குமார் என்பவரின் மருத்துவ பதிவு எண்ணை பயன்படுத்தி போலி கிளினிக்கை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த ஜெயஜோதி (வயது36) என்பவர் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

சான்றிதழ் இல்லை

இந்த கிளினிக்கில் சிவகங்கையை சேர்ந்்த சதீஷ்குமார் (26), புவனேசுவரன் (28) ஆகியோர் டாக்டர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள், நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்ததாக தெரிகிறது.

இது பற்றி விசாரித்த போது அவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்து தேர்ச்சி பெற்றதாக கூறினர். ஆனால் அதற்கான சான்றிதழ் அவர்களிடம் இல்லை.

3 பேர் கைது

மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இருந்தாலும், இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று இருந்தால் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற முடியும். ஆனால் இவர்கள் தேர்ச்சி பெறாமலேயே போலி கிளினிக் நடத்தியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேர் மீதும் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலி கிளினிக்கை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிளினிக் நடத்திய 3 போலி டாக்டர்கள் கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story