வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிறைவு


வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிறைவு
x
தினத்தந்தி 7 Jan 2023 6:45 PM GMT (Updated: 7 Jan 2023 6:46 PM GMT)

சிக்கமகளூரு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கலெக்டர் ரமேஷ் கூறி உள்ளார்.

சிக்கமகளூரு:-

ஆலோசனை கூட்டம்

கர்நாடகத்தில் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி பிரமுகர்களும், தேர்தல் அதிகாரிகளும் தொடங்கி விட்டனர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் வாக்கு அளித்தவர்களில் தற்போது உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் பெயர் நீக்கம், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் உள்ளிட்ட விபரங்கள் மாற்றம் செய்வது போன்றவை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதிய வாக்காளர் பட்டியலை சிக்கமகளூரு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் ரமேஷ், துணை கலெக்டர் ரூபா ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது கலெக்டர் ரமேஷ் பேசியதாவது:- சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 228 ஆண், 4 லட்சத்து 70 ஆயிரத்து 505 பெண் என மொத்தம் 9 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள் இருந்தனா். இதில் 36 திருநங்கைகளும் அடங்குவார்கள்.

காலண்டர் வெளியீடு

இதையடுத்து புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, நீக்கம் செய்யும் பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வாக்காளர்கள் பட்டியலில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 599 ஆண்களும், 4 லட்சத்து 76 ஆயிரத்து 546 பெண்களும், 36 திருநங்கை வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் 19 முதல் 21 வயதுடையவர்கள் 10 ஆயிரத்து 268 பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் வாக்காளர்கள் குறித்த தகவல்களை, முகாம் மூலம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, சுற்றுலாத்துறை சார்பில் 2023-ம்ஆண்டு க்கான காலண்டரை கலெக்டர் ரமேஷ், துணை கலெக்டர் ரூபா ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.


Next Story