ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல் பேராசிரியர் பலி


ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல்  பேராசிரியர் பலி
x
தினத்தந்தி 4 May 2022 7:36 PM GMT (Updated: 4 May 2022 7:36 PM GMT)

மணவாளக்குறிச்சி அருகே ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேராசிரியர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சி அருகே ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பேராசிரியர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பேராசிரியர்
மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் முத்துலிங்கம் (வயது 35), திருமணமாகவில்லை. இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை முத்துலிங்கம் மற்றும் நண்பர் கவுதம் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் குளச்சலில் உள்ள நண்பரை பார்க்க சென்றனர். மோட்டார் சைக்கிளை முத்துலிங்கம் ஓட்டினார். கவுதம் பின்னால் அர்ந்திருந்தார். 
பலி
இதையடுத்து நண்பரை பார்த்துவிட்டு 2 பேரும் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். மணவாளக்குறிச்சியை அடுத்த சாத்தன்விளையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வேகமாக வந்த ஆட்டோ முத்துலிங்கம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் முத்துலிங்கத்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த கவுதமுக்கு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
வழக்கு
இதுகுறித்து முத்துலிங்கத்தின் தந்தை ராஜேந்திரன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆட்டோவை ஓட்டி வந்த பெரியவிளையை சேர்ந்த மணி என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story