ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்


ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்
x
தினத்தந்தி 13 Oct 2024 7:18 AM GMT (Updated: 13 Oct 2024 7:54 AM GMT)

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

பாக்தாத்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும், ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பினரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது இன்று டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலின் கோலன் ஹைட்ஸ் பகுதியை குறிவைத்து இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ராணுவ தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியதாக ஈராக் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது . இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.


Next Story