அசாம்: பயிற்சியின்போது கார் மோதி 4 குழந்தைகள் பலியான சோகம்


அசாம்:  பயிற்சியின்போது கார் மோதி 4 குழந்தைகள் பலியான சோகம்
x
தினத்தந்தி 11 Oct 2024 11:11 AM GMT (Updated: 11 Oct 2024 11:22 AM GMT)

அசாமில் கார் மோதி 4 குழந்தைகள் பலியான சம்பவத்தில், காரை ஓட்டி சென்றது ஒரு பெண் என தெரிய வந்துள்ளது.

தூப்ரி,

அசாமில் கூச்பெஹார் பகுதியில் இருந்து தூப்ரி நோக்கி கார் ஒன்று விரைவாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் தேசிய நெடுஞ்சாலை 17-ல் அகோமோனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சோனாகுளி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த 4 சிறுவர் சிறுமிகள் மீது திடீரென மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில், மரியம் கட்டூன் (வயது 10), ஜுபைர் உசைன் (வயது 7), மெஹ்தி ஹசன் (வயது 5) மற்றும் அபு ரிஹான் (40 நாட்கள்) 4 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதும் அந்த இடத்தில் இருந்து கார் ஓட்டுநர் தப்பி விட்டார்.

விபத்தில் காயமடைந்த, பிறந்து 40 நாட்களேயான அந்த குழந்தை, தூப்ரி மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்து விட்டது. மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்த 4 பேரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஆவர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காரை ஓட்டி சென்றது ஒரு பெண் என தெரிய வந்தது. அவர் புதிதாக கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்திருக்கிறார். அப்போது விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story