தமிழகத்தில் 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-09 02:14 GMT

கோப்புப்படம் 

சென்னை,

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, நேற்று காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கி.மீ, கோபால்பூருக்கு (ஒடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கி.மீ, தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை/இரவு வாக்கில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஒடிசா) - தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்