பழமொழிகளும் அதன் அர்த்தங்களும்

வழக்காற்றில் இருக்கும் பல பழமொழிகளுக்கு அதற்குரிய அர்த்தங்கள் சொல்லப்படாமல், நாளடைவில் மருவி வேறு ஏதோ அர்த்தங்கள் சொல்லப்படுகிறது.

Update: 2023-07-30 12:57 GMT

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து

பொருள்:மனது புண்பட்டிருக்கும் போது புகை விட்டு (புகையிலை) ஆற்றி கொள்ள வேண்டும்.

உண்மையான பொருள்: புண்பட்ட மனதை புக விட்டு ஆற்று.

மனது புண்பட்டிருக்கும் போது, தமக்கு பிடித்த வேறொரு செயலில் மனதை புக விட்டு ஆற்றி கொள்ள வேண்டும் என்பதே சரி.

விருந்தும் மருந்தும் மூன்று நாள்

பொருள்: விருந்துக்கு சென்றால், மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது. மருந்து உட்கொண்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் உண்ண கூடாது. அது எந்த ஒரு தனி மனிதனையும் பாதிக்கும்.

உண்மையான பொருள்: ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளி, வியாழன் ஆகிய தினங்களில் உணவை குறைவாய் உட்கொண்டு மருந்து உண்ண வேண்டும்.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

பொருள்:சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.

உண்மையான பொருள்: சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்த சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

பொருள்: ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.

உண்மையான பொருள்: மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள் (ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள் (நூறு பேர்) பக்கம் நின்றாலும், போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

பொருள்:ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்று பொருள் வருகிறது,

உண்மையான பொருள்: மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

Tags:    

மேலும் செய்திகள்