விராட் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும் - ரவி சாஸ்திரி

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோத உள்ளன.

Update: 2024-06-29 06:29 GMT

கோப்புப்படம்

பார்படாஸ்,

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் லீக் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன.

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறார்.

இந்நிலையில் விராட் கோலி பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, விராட் கோலியின் ஆட்டம் இதுவல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்க போய் தனது விக்கெட்டை பறி கொடுக்கிறார். ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சி செய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார். அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.

தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார். நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில் சிறிது பொறுமையாக காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்