ஐ.பி.எல்.2025: மெதுவாக பந்து வீசினால் இனி கேப்டன்களுக்கு தடை கிடையாது - பி.சி.சி.ஐ. முடிவு

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். சீசன் நாளை தொடங்க உள்ளது.;

Update:2025-03-21 12:18 IST
ஐ.பி.எல்.2025: மெதுவாக பந்து வீசினால் இனி கேப்டன்களுக்கு தடை கிடையாது  - பி.சி.சி.ஐ. முடிவு

image courtesy:twitter/@IPL

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த சீசன்களில் ஒரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்றால் முதல் முறை கேப்டனுக்கு அபராதமும், 2-வது முறையாக இதே தவறை செய்தால் கேப்டன் மட்டுமின்றி அணியின் சக வீரர்களுக்கு அபராதமும் 3-வது முறையாக செய்தால் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும் என்ற விதிமுறை அமலில் இருந்தது.

அதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கடந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டது. அதேபோல் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிர் வரும் சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விதிமுறையில் சில மாற்றங்களை செய்து பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கினால் கேப்டன்களுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படாது.

மாறாக முதல் முறை சிக்கினால் போட்டி கட்டணத்தில் இருந்து 25-75 சதவீதம் அபராதமும், 2-வது முறை அபராதம் மற்றும் கேப்டனுக்கு 4 தகுதி இழப்பு புள்ளிகளும், இதேபோல் மேலும் தொடர்ந்து சிக்கினால் தகுதி இழப்பு புள்ளிகளும் போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. இந்த முடிவை பி.சி.சி.ஐ. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுத்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்