இந்தியாவை வீழ்த்த சி.எஸ்.கே.தான் காரணம் - ஆட்டநாயகன் ரச்சின் ரவீந்திரா பேட்டி

நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-10-20 10:45 GMT

Image Courtesy: AFP

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நியூசிலாந்துக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ரச்சின் ரவீந்திராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருது வென்ற ரச்சின் ரவீந்திரா அளித்த பேட்டியில் கூறியதாவது,

பெங்களூரு நல்ல நகரம். இங்கே பேட்டிங் செய்வதற்கு பிட்ச் நன்றாக இருந்தது. பார்ம் மற்றும் புட் ஒர்க் ஆகிய இரண்டிலும் தயாரானேன். என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும் வரை அனைத்தும் சிறப்பாக செல்லும். இந்த தொடருக்காக தயாரானது உதவி செய்தது. அதற்காக நான் கருமண், செம்மண் போன்ற வித்தியாசமான பிட்ச்களில் வித்தியாசமான பவுலர்களுக்கு எதிராக பயிற்சி எடுக்க முயற்சித்தேன்.

சென்னையில் அந்த உதவிகள் கிடைத்ததற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். சென்னையில் தரமான நேரத்தை செலவிட்டேன். அதற்காக சி.எஸ்.கே-வுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். அது எனக்கு உதவியது. பெங்களூருவில் எங்களுடைய குடும்பத்தின் ஆதரவு கிடைத்தது நன்றாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்