இனி அய்யர்மலை கோவிலுக்கு ரோப் காரில் போகலாம்.. முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் ரோப் கார் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-07-24 12:38 GMT

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 திருக்கோயில்களில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுதுவிர, 9 திருக்கோயில்களில் ரூ.20.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 பணிகளை திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், அய்யர்மலை, அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.ரூ.9.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி (ரோப் கார்) மற்றும் அடிப்படை வசதிகளை பக்தர்களின் பயன்பாட்டிற்கு காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

ரோப் கார் வசதி

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலை, அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தி மூலம் ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்யலாம். மேலும், ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi

Tags:    

மேலும் செய்திகள்