தவெக மாநாட்டிற்கு விசிக வாழ்த்து
சகோதரர் விஜய்யின் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள். தலைவர்களின் கட்-அவுட்டுகளை வைத்து உறுதியான லட்சிய அரசியலை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார். தனது பயணத்தில் விஜய் கொள்கை ரீதியான அரசியலில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
தவெக மாநாட்டில் 20க்கும் மேற்பட்டோர் மயக்கம்
கடும் வெயிலால் தவெக மாநாட்டு திடலில் 20க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு: 150 வாகனங்களில் புறப்பட்ட தொண்டர்கள்
தவெக மாநாட்டில் பங்கேற்க நாகையில் இருந்து 150 வாகனங்களில் தொண்டர்கள் புறப்பட்டுள்ளனர். இதனால் நாகை புதிய பேருந்து நிலையம் முதல் நாகூர் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாகை-நாகூர் சாலையில் தொண்டர்கள் ஆரவாரத்துடன் அணிவகுத்துச் சென்ற வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக மாநாடு - குடிநீரின்றி தொண்டர்கள் அவதி
தவெக மாநாட்டுக்கு அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்து வரும் சூழலில் குடிநீர் கிடைக்காமல் தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர். குடிநீரின்றி மயக்கமடைந்த நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு உள்பகுதியில் திரள்வதால் கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறி வருகின்றனர். மாநாட்டு திடலில் இரு புறங்களிலும் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமைதி காக்கும்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் - டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
தவெக மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
தவெக மாநாட்டில்.அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு பகுதிகளில் அமர்ந்துள்ள தொண்டர்களை பவுன்சர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் பவுன்சர்கள் - தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தவெக மாநாட்டுக்கு சென்ற இளைஞர் காயம்
தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ரெயிலில் சென்றவர்கள் மாநாட்டு பந்தலை பார்த்து பலர் ஆர்வமிகுதியில் கீழே குதித்து உள்ளனர். ரெயிலில் இருந்து குதித்தபோது தவறி விழுந்த நிதிஷ் குமார் (வயது 21) என்ற இளைஞர் தீவிர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக மாநாட்டிற்காக சென்ற இளைஞர் சென்னை தேனாம்பேட்டையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தவெக மாநாட்டிற்கு சென்றவர்களின் வாகனம் தாம்பரம் அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணிவகுக்கும் வாகனங்கள்...
தவெக மாநாடு நடைபெறும் வி.சாலையில் சுமார் 2 கி.மீ.,தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டணமில்லாமல் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் கட்டளையை மீறிய தொண்டர்கள்
தவெக திடலில் முண்டியடித்து நுழைந்த தொண்டர்களால், கடைசி 4 வரிசையில் இருந்த சேர்கள் உடைக்கப்பட்டுள்ளது. விஐபி சேர்கள், மகளிருக்கான இருக்கைகளையும் ஆண் தொண்டர்கள் ஆக்கிரமித்துள்ளதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் ஸ்கேன் முறையை தொண்டர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.