ரமலான் பண்டிகை: சிறப்பு ரெயில்களை அறிவித்த தெற்கு ரெயில்வே
ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
புனித பண்டிகையான ரமலானை இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டில் வரும் 31-ந் தேதி கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னையில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்கான ரெயில் முன்பதிவு கடந்த மாதமே முடிந்து விட்டது.
இந்நிலையில் சொந்த ஊர் செல்வோரின் வசதிக்காகவும் , பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்கவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1. ரெயில் எண். 06037 / 06038 தாம்பரம் - கன்னியாகுமரி - தாம்பரம் விழா சிறப்பு ரெயில்கள்:
ரெயில் எண். 06037 தாம்பரம் - கன்னியாகுமரி விழா சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து மார்ச் 28, 2025 (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் (1 சேவை)
மறுமார்க்கமாக, கன்னியாகுமரி - தாம்பரம் திருவிழா சிறப்பு ரெயில் (06038) மார்ச் 31, 2025 (திங்கள்) அன்று இரவு 20.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 08.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் (1 சேவை).
2. ரெயில் எண். 06048 / 06047 தாம்பரம் – திருச்சிராப்பள்ளி – தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்கள் (வாரத்திற்கு 3 நாட்கள்):
ரெயில் எண் 06048 திருச்சிராப்பள்ளி - தாம்பரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (வாரத்திற்கு 3 நாட்கள்) மார்ச் 29 முதல் மார்ச் 31, 2025 வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் திருச்சிராப்பள்ளியில் இருந்து அதிகாலை 05.35 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும் (3 சேவைகள்)
மறுமார்க்கமாக, தாம்பரம் - திருச்சிராப்பள்ளி விரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண். 06047) மார்ச் 29 முதல் மார்ச் 31, 2025 வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 11.40 மணிக்கு திருச்சிராப்பள்ளியை சென்றடையும் (3 சேவைகள்)
மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு 23.03.2025 அன்று (நாளை) காலை 08.00 மணிக்குத் தொடங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோவை அருகே உள்ள போத்தனூருக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.