தொகுதி மறு சீரமைப்பு கூட்டுக் குழு கூட்டம்: பங்கேற்காத கட்சிகள் எது..?
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.;

சென்னை,
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழகம் போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரது தலைமையில் கடந்த 5-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் 58 கட்சிகள் கலந்து கொண்ட அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்) ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா), பினராயி விஜயன் (கேரளா), சித்தராமையா (கர்நாடகா), பகவந்த் மான் (பஞ்சாப்), சந்திரபாபு நாயுடு (ஆந்திரா) மற்றும் கர்நாடகா துணை முதல்-மந்திரி சிவகுமார், முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா), நவீன் பட்நாயக் (ஒடிசா), சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்கான கூட்டம் மார்ச் 22-ந்தேதி சென்னையில் நடத்தப்படும் என்றும், அதில் பங்கேற்க வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. இதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கவில்லை. முன்னதாக இரு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள கட்சிகளின் விவரம்:-