தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.;

சென்னை,
தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் சமீபத்தில் பொறுப்பேற்றதைத்தொடர்ந்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (திங்கட்கிழமை) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன. 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் கேட்டறிந்து தீர்த்து வைக்கப்பட உள்ளது.