டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த பரிதாபம்
டெங்கு காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

கே.வி.குப்பம்,
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே முடினாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் சிவானி (வயது 13) அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிரஞ்சனா (11) அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சூழலில் மாணவி சிவானி, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த 7-ந் தேதி, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பயனின்றி சிறுநீரகம், கணையம், நுரையீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் செயலிழந்து நேற்று அவர் பரிதாபமாக உயிரிழ்ந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.