உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை: ஐகோர்ட்டு மதுரை கிளை
உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.;

மதுரை,
திண்டுக்கல் சத்திரப்பட்டியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர், ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மத்திய கல்வி அமைச்சகம் அங்கீகரித்துள்ள தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளில் உள்ள சிறந்த உள்கட்டமைப்பு வசதி, பேராசிரியர்களின் கற்பித்தல் திறன் உள்ளிட்ட தரவுகளை ஆய்வு செய்து சிறந்த கல்லூரிகளின் பட்டியலை வெளியிடும்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு உயர்கல்வி நிறுவனங்கள் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வெளியிடும் சிறந்த கல்லூரிகளில் சில கல்லூரிகள் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. எனவே, உரிய உண்மையான தரவுகளை சரி பார்த்து, ஒப்பிட்டு கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டும். எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பாக அரசு ஆவணங்களில் உள்ள பதிவுகளில் இருக்கும் தரவுகளுடன் ஒப்பிட்டு, அவற்றை சரிபார்த்து உறுதி செய்த பின் நடப்பாண்டு தரவரிசை பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று அதி கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறந்த கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் தொடர்பான என்.ஐ.ஆர்.எப். தரவரிசை பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்து, மனு குறித்து மத்தியக் கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.