எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு - சீமான்
த.வெ.க. தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.;

கோப்புப்படம்
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "9.5 லட்சம் கோடியாக தமிழ்நாட்டிற்கு கடன் தொகை அதிகரித்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளது. இவ்வளவு கடனை பெற்று என்ன செய்துள்ளது?
பஸ் கட்டணம், மின் கட்டணம், சொத்துவரி என எல்லா கட்டணமும் உயர்ந்துள்ளது. நொய்யல் ஆற்றையே கொன்று விட்டு அதற்கு அருங்காட்சியகம் வைக்க போகிறீர்களா...? ஈழத் தமிழர்களுக்கு 87 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டி தர போவதாக அறிவித்துள்ளார்கள். 87 ஆயிரம் ரூபாயில் கழிவறை தான் கட்ட முடியும், வீடு கட்ட முடியாது.
கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறியதில் என்ன செயல்பாட்டுக்கு வந்துள்ளது? தேர்தல் வருவதால் இது போன்ற அறிவிப்புகளை அறிவிக்கிறார்கள். கல்விக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது? கல்விக்கு அவ்வளவு நிதி ஒதுக்கினாலும் அது எங்கு போய் சேருகிறது என்று தெரியவில்லை.
அமைச்சர்கள் தான் தனியார் பள்ளிகளை நடத்துகிறார்கள். மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு எதுவும் இல்லை.
ரூபாயில் வரும் "ரூ" என்பது தமிழ் எழுத்து இல்லை. 'ர' என்ற எழுத்து தமிழில் துவங்காது. அப்படி இருக்கும்போது அதை தமிழ் எழுத்து என்று கூறுவதா?. சென்னை மாநகராட்சியில் கடை பலகைகளில் தமிழில் பெயர்கள் இருக்க வேண்டும் என்று மேயர் பிரியா கூறி இருக்கிறார். மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா? தமிழ் பேசவே வரவில்லை.
முதல்-அமைச்சரின் குடும்பத்தினர் நடத்தக்கூடிய பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம் விதிக்ககூடிய நிலை உள்ளது. உங்கள் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழி பாடமாக இருக்கிறது. பா.ஜ.க. மாநில அமைச்சர்கள் ஆளும் மாநிலங்களில் கூட, அம்மாநில மொழிக்கு முக்கியத்துவம் இருக்கிறது. கர்நாடகாவில் கூட சித்தராமையா கன்னடத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை" என்று அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்புக்கு ஆய்வு செய்து சென்றது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், "அது தவறில்லை. விஜய் மாதிரி ஒரு புகழ்பெற்ற கலைஞன் பொது வெளியில் வரும் போது பாதுகாப்பு வழங்குவதில் தவறில்லை. அவருக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது என்றால் கொடுக்கலாம்.
எனக்கு பாதுகாப்பு தேவையில்லை.. நான் தான் நாட்டுக்கு பாதுகாப்பு" என்று அவர் கூறினார்.