மிக கனமழை எச்சரிக்கை... அரக்கோணம் முகாமில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

Update: 2024-10-13 08:51 GMT

அரக்கோணம்,

தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகம், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள், அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவை காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகளவில் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

கனமழையின் போது மீட்பு பணிகளில் ஈடுபட மொத்தம் 300 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒரு குழுவுக்கு 30 பேர் வீதம் மொத்தம் பத்து குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரிகள் நேரடி தொடர்பில் உள்ளனர். ரப்பர் படகுகள் உள்ளிட்ட மீட்பு கருவிகளுடன் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்