த.வெ.க. மாநாடு - காவல்துறை விதித்துள்ள முக்கிய நிபந்தனைகள் என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

Update: 2024-09-08 10:46 GMT

விழுப்புரம்,

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தற்போது அக்கட்சியின் முதல் மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் மாநாடு நடத்துவதற்காக 85 ஏக்கர் நிலத்தை அக்கட்சியினர் தேர்வு செய்துள்ளனர். இங்கு வருகிற 23-ந்தேதி மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் மாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் அதற்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று கூறி, கடந்த மாதம் 28-ந்தேதி, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் அக்கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர். போலீசார் கேட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பு நேற்று முன்தினம் பதிலளித்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில் முக்கிய நிபந்தனைகள் பின்வருமாறு;

* மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை பேர் மேடையில் அமரப் போகிறார்கள்?

* மாநாடு முழுவதும், பார்க்கிங் உட்பட அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்

* போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் மாநாடு நடத்தப்பட வேண்டும்.

*மாநாடு 2 மணிக்கு தொடங்கினால், 1.30 மணிக்குள் தொண்டர்கள் பந்தலுக்குள் வந்துவிட வேண்டும். 2 மணிக்கு மேல் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்

* மாநாட்டிற்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் எத்தனை பேர் வர உள்ளனர்?

* எந்த பிரதிநிதி தலைமையில் வருவார்கள் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

*குடிநீர், உணவு பொருட்கள் அனைத்தும் அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அமர தனியாக இடம் ஒதுக்க வேண்டும்.

* நடிகர் விஜய் வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி அதற்கு பேரிகார்டு அமைக்க வேண்டும்.

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ள நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை விஜய் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்