மதுரை: பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து; 2 பேர் பலி

மதுரையில் பெண்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர்.

Update: 2024-09-12 01:43 GMT

மதுரை,

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி பெரியார் நிலையம் பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக 2 வாகனங்களில் சம்பவ பகுதிக்கு சென்றனர்.

இதனை தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. தீ விபத்தில் சிக்கிய பெண்களை மீட்கும் பணியும் நடந்தது. விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்து உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. மற்றவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

எனினும், தீ விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். காயமடைந்த மற்ற பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 2 பேரும் சரண்யா, பரிமளா என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதும் அடுத்தடுத்து தீ பரவி கரும்புகை எழுந்தது. இதனால், பெண்களுக்கு மூச்சு திணறல் மற்றும் சுவாச பாதிப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்