திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை: மாணவிகள் விடிய விடிய போராட்டம்

பெண் வார்டன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் உறுதி அளித்துள்ளார்.

Update: 2024-08-30 03:07 GMT

திருச்சி,

திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்க வேண்டும் என்றால் மாணவர்கள் ஜே.இ.இ. மெயின்ஸ் என்ற தகுதி தேர்வை எழுதி அதில் சரியான கட் ஆப் பெறுவோருக்கு இந்த கல்லூரியில் பொறியியல் படிக்க இடம் கிடைக்கும்.

சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்க ஜே.இ.இ. அட்வான்ஸுடு தேர்வு எழுத வேண்டும். இது சற்று கடினமாக இருக்கும் என்பதால் பெரும்பாலானோர் திருச்சி என்.ஐ.டி.யில் சேர விரும்புகிறார்கள். இங்கு மாணவர்கள், மாணவிகளுக்கென விடுதி வசதியும் உள்ளது.

இந்த நிலையில் இங்குள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரக்குறைவாக வார்டன் பேசியதாக தெரிகிறது. இதனால் வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஐ.டி. இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்.ஐ.டி கல்லூரி வார்டன் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கூறியுள்ளார். 

இதனிடையே திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்