கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்படும் என்று முதல் அமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2024-08-22 12:30 GMT

சென்னை,

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழர் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவருமான தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கியுள்ளார்.

தமது 23-வது வயதில் ராஜகுமாரி திரைப்படத்திற்கு முதன் முதலாக தலைவர் கருணாநிதி வசனம் எழுதினார். அனார்கலி, உதய சூரியன், உன்னைத்தான் தம்பி, இளைஞன் குரல், ஒரே முத்தம், காகிதப்பூ, சாக்ரடிஸ், சாம்ராட் அசோகன், சிலப்பதிகாரம் – நாடகக் காப்பியம், சேரன் செங்குட்டுவன், திருவாளர் தேசியம் பிள்ளை, தூக்குமேடை, நச்சுக் கோப்பை, நான்மணிமாலை, நானே அறிவாளி, புனித ராஜ்ஜியம், மணிமகுடம், மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்), மந்திரிகுமாரி உள்ளிட்ட பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை, சுருளிமலை, வான்கோழி, புதையல், ஒரே ரத்தம், ஒரு மரம் பூத்தது, அரும்பு, பெரிய இடத்துப் பெண், சாரப்பள்ளம் சாமுண்டி, நடுத்தெரு நாராயணி ஆகிய நாவல்களையும்; ரோமாபுரிப் பாண்டியன், பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு, பாயும் புலி பண்டாரக வன்னியன், தென்பாண்டிச் சிங்கம், தாய் – காவியம் ஆகிய வரலாற்று நாவல்களையும்; சங்கிலிச் சாமியார், கிழவன் கனவு, பிள்ளையோ பிள்ளை, தப்பிவிட்டார்கள், தாய்மை, நாடும் நாடகமும், முடியாத தொடர்கதை, பதினாறு கதையினிலே, நளாயினி, பழக்கூடை, தேனலைகள், ஒருமரம் பூத்தது, மு.க.வின் சிறுகதைகள் உள்ளிட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியுள்ளார். கவிதை தொகுப்பு

கவிதையல்ல, முத்தாரம் (சிறையில் எழுதிய கவி வசனங்கள் தொகுப்பு), அண்ணா கவியரங்கம், பியர்ல்ஸ் (மொழிமாற்றம்), கவியரங்கில் கலைஞர், கலைஞரின் கவிதைகள், வாழ்வெனும் பாதையில், கலைஞரின் திரை இசைப்பாடல்கள், கலைஞரின் கவிதை மழை, காலப் பேழையும் கவிதைச் சாவியும் உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளும் அவரது கவித்திறமையை வெளிப்படுத்துவன.

கருணாநிதியின் குறளோவியம் மிகவும் புகழ்பெற்ற நூல்; தேனலைகள், சங்கத் தமிழ், திருக்குறள் கலைஞர் உரை, தொல்காப்பியப் பூங்கா உள்ளிட்ட தமிழறிஞர்கள் போற்றும் உரை நூல்களையும் அவர் படைத்துள்ளார்.

தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. 'நெஞ்சுக்கு நீதி' என்னும் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்று நூல் 6 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 1957 முதல் 2018-ம் ஆண்டுவரை கருணாநிதி சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் 12 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தனியொரு மனிதரால் அவரது வாழ்நாள் காலத்தில் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா? என வியப்புறும் வண்ணம் இலக்கிய உலகில் சாதனைகள் படைத்தவர் கருணாநிதி.

80 ஆண்டு காலம் பொது வாழ்வு, 5 முறை முதல்-அமைச்சராக மக்கள் பணி மட்டுமல்லாமல் தலைவர் கருணாநிதி 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை வசனங்களையும், 15 நாவல்களையும், 20 நாடகங்களையும், 15 சிறுகதைகளையும், 210 கவிதைகளையும் படைத்துள்ளார்.

இவற்றைத் தவிர, தாம் பணியாற்றிய இதழ்களில் எண்ணற்ற தலையங்கங்களையும் தீட்டியுள்ளார். மேலும், தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற காலங்களில் 108 தமிழறிஞர்களின் புத்தகங்களை நாட்டுடைமை செய்து, அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகையாக ரூ.7 கோடியே 76 லட்சம் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

இத்தகைய ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் நாட்டுடமையாக்கம் செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் தலைவர் கருணாநிதியின் செழுமையான நூல்களை ஊன்றிப் படிக்க அரியதொரு வாய்ப்பாக அமையும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்