தக்காளி விலை விரைவில் குறையும்: மத்திய அரசு

விளைச்சல் பாதிக்கப்பட்டதால் விலை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2024-10-17 10:16 GMT

புதுடெல்லி,

அத்தியாவசிய சமையல் பொருட்களில் ஒன்றான தக்காளியின் விலை கடந்த சில மாதங்களாக சீராக இருந்து வந்த நிலையில், திடீரென நாடு முழுவதும் விலை அதிகரித்தது. சில மாநிலங்களில் விலை 100 ரூபாயை கடந்தது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். ஹோட்டல் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். 

இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது. குறிப்பாக, தென் மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் தக்காளியின் விலை விரைவில் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே கூறுகையில்;

தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பருவமழை தாக்கம், பயிர் சேதம் மற்றும் பூச்சி தாக்குதலால் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளதால் விநியோகம் குறைந்துள்ளது. இதனால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் வட மாநிலங்களிலும் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது 100-ஐ தாண்டியுள்ளது.

மராட்டியத்தில் இருந்து விநியோகிக்கப்பட்டு வரும் தக்காளியின் அளவு விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது டெல்லியில் விலையை கட்டுப்படுத்த உதவும். டெல்லி மற்றும் மும்பையில் ஒரு கிலோ ரூ.65 என்ற மானிய விலையில் அரசு தொடர்ந்து விற்பனை செய்யும். விளைச்சல் அதிகரிப்பதன் மூலம் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்