குடிபோதையில் கன்றுக்குட்டியை கடித்து ரத்தத்தை குடித்த வாலிபர்

கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற வாலிபருக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-07-18 21:07 GMT

சித்தூர்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தை அடுத்த கூடுபள்ளி மண்டலம் பிசாநத்தம் அருகில் உள்ள ஒண்டிப்பள்ளியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 29). இவர், குடிபோதையில் அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்தார்.

அப்போது அங்கு மரத்தில் கட்டி வைத்திருந்த ஒரு கன்றுக்குட்டியின் கழுத்தை திடீரெனக் கடித்து ரத்தத்தை குடித்தார். மேலும் கன்றுக்குட்டியை பல இடங்களில் கடித்துக்குதறி ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். அதில் கன்றுக்குட்டி துடி துடித்து இறந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அவரை விரட்டிப் பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டு அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூடுபள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிராம மக்களிடமும், அவரிடமும் விசாரித்தனர். சுப்பிரமணி கடித்துக் கொன்ற கன்றுக்குட்டியை போலீசார் பார்த்தனர். சுப்பிரமணியை மீட்டு விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

குடிபோதையில் கன்றுக்குட்டியை கடித்துக்கொன்ற அவருக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும், எனக் கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்