ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு - ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

Update: 2024-06-07 13:00 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதாதளம் 12 தொகுதிகளையும் கைப்பற்றின. தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.

இதற்காக இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை டெல்லி ராஷ்டிரபதி பவனில் மோடி சந்தித்து தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை வழங்கினார். மேலும், ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவு கடிதத்தையும் ஜனாதிபதியிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து நாளை மறுநாள் (ஜூன் 9) பிரதமராக மோடி பதவி ஏற்க இருக்கிறார். மாலை 6 மணிக்கு மோடி மற்றும் மந்திரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்