புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட்

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Update: 2024-08-16 03:53 GMT

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன இ.ஓ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்-ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும். இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் சிறியரக எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.17 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

செயற்கைக்கோளை சுமந்து செல்லும் எஸ்.எஸ்.எல்.வி டி-3 ராக்கெட் மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இந்த ராக்கெட் திட்டமிட்ட நேரத்தில் பூமியில் இருந்து புறப்பட்டு சரியாக 13 நிமிடத்தில், 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்