அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ள்ளது.

Update: 2024-08-31 13:47 GMT

டெல்லி,

அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரியானா சட்டசபை தேர்தல் தேதி மாற்றப்படுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, அரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அரியானாவில் பிஜோனி என்ற சமுதாய மக்களின் முக்கிய பண்டிகை தேர்தல் நடைபெறவிருந்த நாளான்று வருவதால் அக்டோபர் 1ம் தேதிக்கு பதில் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேவேளை, 90 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.    

Tags:    

மேலும் செய்திகள்