கேரளாவில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

கார்-லாரி நேருக்கு நேர் மோதிய சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-10-23 05:02 GMT

பாலக்காடு,

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் இருந்து வந்த கார், பாலக்காடு-கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அய்யப்பன்காவு அருகே சென்றபோது எதிர் திசையில் வந்த லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தை அடுத்து கார் லாரியின் அடியில் சிக்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு பாலக்காடு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பாலக்காடு மாவட்ட மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் தகவல்படி, உயிரிழந்தவர்கள் கே கே விஜேஷ் (35), ரமேஷ் (31), விஷ்ணு (30), மற்றும் முகமது அப்சல் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் அடையாளம் இன்னும் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்