ஆந்திர கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமாவின் ஒரு சில இடங்களில், அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Update: 2024-10-19 15:10 GMT

அமராவதி,

வடகிழக்கு பருவமழை சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (சூறாவளி சுழற்சி) வடக்கு தமிழக கடலோரத்தின் தென்மேற்கு மற்றும் அதனையொட்டி உள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலவி வருகிறது என தெரிவித்து உள்ளது.

இது 5.8 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்து உள்ளது. தெற்கு-மேற்குபகுதியை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, மத்திய அந்தமான் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, 5.8 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்து உள்ளது. இதனால், வருகிற 21-ந்தேதி கிழக்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

அதன்பின்னர், அது வடமேற்காக நகர்ந்து சென்று, வருகிற 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக தீவிரமடையும். இதனால், அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும். அடுத்த 24 மணிநேரத்தில் தெற்கு கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ராயலசீமாவின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.

அடுத்த 3 நாட்களில், கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் மற்றும் ராயலசீமாவின் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் ஏற்பட கூடும். அடுத்த 7 நாட்களில், கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் மற்றும் ராயலசீமாவின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித அளவிலான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில், தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் மற்றும் ராயலசீமாவுக்கு உட்பட்ட திருப்பதி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதேகாலகட்டத்தில், கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் மற்றும் ராயலசீமாவின் பல பகுதிகளில் மழை பெய்தது என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்