லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேக நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2024-06-25 06:50 GMT

கொச்சி,

சமீப நாட்களாக சென்னை, மும்பை போன்ற முக்கிய விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கைது செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் இன்று லண்டனுக்கு செல்ல இருந்தது.அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மும்பையில் உள்ள விமானசேவை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது.

இதனை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் விமானம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கிடைக்காததால் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சந்தேக நபர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்