தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 30-ந் தேதி வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-23 10:40 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்வதற்கான கால அளவு 30.09.2024 வரை ஏற்கனவே வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நேரடி மாணவர் சேர்க்கை 30.10.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா ஷூ, விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.

சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நிலையில் கீழ்காணும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அலைபேசி எண் மற்றும் வாட்ஸ்-அப் எண்: 9499055689. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்