தொடர் விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2024-09-15 10:58 GMT

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்நிலையில், தொடர் விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்தனர். கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன.

கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது.

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்