பத்திரிகையாளராக இருந்து பின்னர் சினிமாவில் வில்லனாக கலக்கிய நடிகர்

சிரஞ்சீவி, அஜய், அக்சய் உள்ளிட்டோருடன் ராமி ரெட்டி பணியாற்றி இருக்கிறார்

Update: 2024-07-28 06:30 GMT

சென்னை,

இந்த நடிகர் படங்களில் நடிப்பதற்காக பத்திரிகையாளர் வேலையை விட்டுவிட்டு, சினிமாவுக்கு வந்தவர். சிரஞ்சீவி, அஜய், அக்சய் ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறார்.

பாலிவுட்டில் வில்லன் என்றாலே, அம்ரிஷ் பூரி, அம்ஜத் கான், டேனி டென்சோங்பா, குல்ஷன் குரோவர் மற்றும் பிரேம் சோப்ரா ஆகியோர்தான் நம் நினைவுக்கு வருவார்கள். இவர்களுக்கும் மேலாக தன் பார்வையினாலேயே பயம் கொடுக்கும் நடிகர் ஒருவர் உள்ளார். அவர்தான் ராமி ரெட்டி.

ராமி ரெட்டி ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகை பட்டப்படிப்பை முடித்து, பின்பு ஒரு நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றினார். ஒரு நாள் பிரபல தெலுங்கு இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவை பேட்டி எடுக்க ராமி சென்றார்.

அப்போது ராமி ரெட்டியின் திறமையை பார்த்து ஈர்க்கப்பட்ட இயக்குனர் தனது 'அங்குசம்' படத்தில் அவருக்கு எதிர்மறையான பாத்திரத்தை வழங்கினார். ராமி இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். 'அங்குசம்' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி ராமிக்கு சரியான தொடக்கத்தைக் கொடுத்தது.

அங்குசம் படத்தின் இந்தி ரீமேக்கான சிரஞ்சீவி நடித்த 'பிரதிபந்த்' (1990) படத்திலும் அவர் நடித்தார். பிரதிபந்த் படமும் பாக்ஸ் ஆபிசில் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில், ஸ்பாட் நானாவாக நடித்த ராமியின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது, மேலும் அவர் பிரபலமான வில்லன்களில் ஒருவரானார்.

இதன் பிறகு ராமி வெவ்வேறு மொழிகளில் பணியாற்றினார். தில்வாலே (1994), குண்டா (1998), குதார் (1994), ஷபத் (1997), மற்றும் வக்த் ஹுமாரா ஹை (1994) போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. தமிழில் 'நெஞ்சினிலே' திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். பின்னர் 'அம்மன்', 'கோட்டை மாரியம்மன்' போன்ற பக்தி திரைப்படங்களில் நடித்து தமிழில் மிகவும் பிரபலமானவர்.

பின்னர் 2010ல் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் துரதிர்ஷ்டவசமாக ஐதராபாத்தில் 2011-ம் ஆண்டு காலமானார். அப்போது ரெட்டிக்கு 52 வயது.

Tags:    

மேலும் செய்திகள்