'சுய மரியாதை முக்கியம்' - 'குக்வித் கோமாளி'யில் இருந்து விலகிய மணிமேகலை

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக மணிமேகலை அறிவித்துள்ளார்.

Update: 2024-09-15 12:50 GMT

சென்னை,

15 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளியில் ஒரு கோமாளியாக சேர்ந்தார். தற்போது அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இடம் பெற்றுள்ளார். அதேசமயத்தில், பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா தற்போது, ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளியில் இருந்து விலகியதாக மணிமேலை அறிவித்துள்ளார்.

கடந்த சில எபிசோடுகளில் மணிமேகலை வராததால் அவரது ரசிகர்கள் வலைதளபக்கங்களில், கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்து மணிமேகலை வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், 'இந்த நிகழ்ச்சியில் நிறைய போட்டியாளர்கள் உள்ளனர். அதில் தொகுப்பாளினியாக இருந்த ஒருவரும் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளர், ஆனால் அப்படி இல்லாமல் நிறைய விஷயங்களில் நுழைந்தார். நான் கடைசியாக பண்ண எபிசோடு வரை இது இருந்தது. இதை குழுவிடம் கூறினேன். ஆனாலும் , அந்த தலையீடு அதிகமாக இருந்தது. எனக்கு எப்பவுமே ஏன்டா இவங்க இப்படி பண்றாங்க என்று பின்னால் சொல்ல வராது நேருக்கு நேர்தான்.

நான் கோமாளியாக இருந்தபோது கோமாளியாக மட்டுமே நடந்துகொண்டேன், ஆனால், அவர் என் வேலையில் குறுக்கிடுகிறார். அவரே எல்லா வாய்ப்புகளை குவித்து வாழ்ந்து தீர்கட்டும். எனக்கு சுய மரியாதை முக்கியம். கொடுக்கும் பணத்திற்கு வேலை பார்க்கிறேன். அதைத்தாண்டி மற்றொருவர் என் வேலையில் குறுக்கிடுவது எனக்கு பிடிக்கவில்லை,' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதை மணிமேகலை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், பிரியங்கா தரப்போ, நிகழ்ச்சி தரப்போ மணிமேகலையின் குற்றச்சாட்டுக்கு இதுவரை விளக்கம் தரவில்லை. மணிமேகலை வீடியோ வெளியிட்டது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளநிலையில், மீண்டும் மணிமேகலை குக் வித் கோமாளிக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்