காதல் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி நடிகை ஊர்மிளா மனு

பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2024-09-25 10:03 GMT

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர். இவர் 1990களில் இந்தித் திரைப்படங்களில் கொடிகட்டிப் பறந்த நாயகியாக  இருந்தார். இவருக்கென இந்தி திரையுலகில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. இவர் 1996-ம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக திகழ்ந்தார்.

சினிமா, நடிப்பு மட்டுமின்றி அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் ஊர்மிளா மடோன்கர். இவர் காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும், மாடலுமான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் இடையே 10 வயது வேறுபாடு இருந்த போதிலும் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இந்தியத் திரையுலகில் இது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டது. இப்படியாக மணமுடித்து இவர்கள் 8 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் தற்போது இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நடிகை ஊர்மிளா தனது கணவரைப் பிரியும் முடிவினை எடுத்துள்ளார்.

இந்தநிலையில், ஊர்மிளா தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் எனக்கோரி மும்பை கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த விவாகரத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த விவாகரத்து கோரும் மனுவை ஊர்மிளா தாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்